Wednesday, March 13, 2019

'அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.!' - வாட்ஸ்-அப் அதிரடி WhatsApp

தங்களது பயன்பாட்டாளர்கள் அங்கீகராமற்ற வாட்ஸ்-அப் தொடர்பான ஆப்ஸுகளை பயன்படுத்தினால் தடை செய்யப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.



இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பது, பணம் அனுப்புவது, குரூப் ஃபார்வேட் மெசஜ்களை நிபந்தனைக்குள் கொண்டு வந்தது உள்ளிட்ட அப்டேட்கள் வரவேற்பை பெற்றன.

அதேசமயம் வாட்ஸ்-அப் மூலம் போலி செய்திகளை பரப்புவது, வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றத்தை காட்டி பிறரை மிரட்டுவது உள்ளிட்ட எதிர்மறை கருத்துக்களும் வாட்ஸ்-அப் மீது வைக்கப்பட்டன. இருப்பினும் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அசுரத் தனத்தில் உயர்ந்துள்ளது. அதேசமயம் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் செயலியைப் போன்றே பல போலி செயலிகள் ப்ளே-ஸ்டோரில் சித்தரிக்கப்பட்டுள்ளன. பல வெப்-சைட் ஹேக்கர்கள் இந்தச் செயலை செய்துள்ளனர்.

அவர்கள் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆப்ஸ்-களை பயன்படுத்துவோர் தங்களுக்கு தெரியாமலே சொந்த தகவல்களை பிறருக்கு அளித்துக்கொண்டிருக்கின்றனர். இதுதவிர சில வாட்ஸ்-அப் கட்டுப்பாடுகளை மீறுவதற்கும், பிறரை ஏமாற்றுவதற்கும் இதுபோன்ற போலி செயலிகளை பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, கடைசியாக வாட்ஸ்-அப்பை பார்த்த நேரம் எனக் குறிப்பிட்ட நேரத்தை பதிவு செய்துவிட்டு, இரவு முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்தினாலும் அவர்கள் குறித்து வைத்த நேரமே கடைசி நேரமாக காட்டும். இதன்மூலம் தங்கள் நண்பர்களை அந்த நபர் ஏமாற்ற நேரிடும்.

அதேபோன்று வாட்ஸ்-அப் செயலில் ஒரு தகவலை பிறருக்கு அனுப்பிய உடனே அதை நீக்கிவிட்டால், அதனை காண இயலாது. ஆனால் போலி வாட்ஸ்-அப் செயலிகளில் அதை காண இயலும். இதுபோன்ற சில வசதிகளுக்காக சிலர் இந்த போலி வாட்ஸ்-அப் செயலிகளில் கணக்குத்தொடங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களின் தகவல்கள் ஒரு பக்கம் திருடப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இந்நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்-அப் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ்-அப் ப்ளஸ் (WhatsApp Plus) மற்றும் ஜிபி வாட்ஸ்-அப் (GB WhatsApp) ஆகிய செயலிகளை பயன்படுத்தும் வாட்ஸ்-அப் பயன்பட்டாளர்களின் கணக்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இரண்டு செயலிகளும் தங்களின் அதிகாரப்பூர்வ செயலிகள் இல்லை என்றும், இந்தச் செயலிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களின் பாதுகாப்பிற்கு தாங்கள் பொறுப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த செயலிகளை பயன்படுத்து நபர்கள், உடனே அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்-அப் செயலிக்கு தங்கள் தகவல்களை மாற்றிக்கொண்டு அதை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் வாட்ஸ்-அப் கணக்குகள் நிரந்தமாக முடக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது, அந்தச் செயலிகளை பயன்படுத்துவோரின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News