சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதியுடன் இந்த தேர்வு முடிவடைந்தது. லோக்சபா தேர்தல் காரணமாக இந்த தேர்வு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது.
மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சென்ற ஆண்டு 94.5% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். எல்லா வருடமும் போல இந்த வருடமும் மாணவிகளே அதிக பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 93.3 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 97% தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பல வருடங்களாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
சென்ற வருடம் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தார்கள். இந்த வருடம் அது 93.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்ற வருடம் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் 96.4% மாணவிகள் தேர்ச்சி அடைந்தார்கள். இந்த வருடம் அது 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.