Sunday, April 7, 2019

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு


ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர் பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையின்படி, பணி நியமனம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர், தையல் பயிற்சி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்ற 80 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த இடஒதுக்கீட்டின்கீழ் தங்களுக்குப் பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.


இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த சிறப்பு ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் சமர்ப்பித்த விண்ணப்பத்திலும், சான்றிதழ் சரிபார்ப்பு படிவத்திலும் தமிழ் வழியில் படித்தவர்கள் என குறிப்பிட்டிருந்தவர்களுக்கு மட்டும், இடஒதுக்கீட்டு சலுகையின்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றி பணி நியமனம் வழங்க வேண்டும். அதே நேரத்தில் தமிழ்வழியில் படித்த விவரத்தை தெரிவிக்காதவர்களுக்கு இந்த இடஒதுக்கீட்டை வழங்கக் கூடாது என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News