Tuesday, April 30, 2019

ஓவியத்தின் மூலம் கல்வி: அரசு பள்ளிகள் அசத்தல்

அரசு பள்ளிகள் சுவர் சித்திரங்களை தீட்டி தனியார் பள்ளிகளுக்கு இணையாக அசத்தி வருகின்றன.அரசு பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுக்க வகுப்பறை சூழலும் ஒரு காரணம். அதனை தவிர்க்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக தற்போது, அரசு பள்ளிகளும் வகுப்பறை, பள்ளி வளாகத்தில் வண்ண ஓவியங்கள் மூலம் கல்வி புகட்ட முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.அரசு பள்ளிகளின் முயற்சியை கண்ட ஓவியர்கள் தாங்களே சொந்த செலவில் ஓவியங்களை தீட்டி அரசு பள்ளி வளாகங்களை அழகாக்கி வருகின்றனர்.

இயற்கை காட்சிகள், வாழ்க்கை நடைமுறை நிகழ்வுகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும், ஓவியமாக வரையப்படுகிறது. அதில் கவிதைகள், திருக்குறள், அறிவியல் உண்மைகள் குறிக்கப்பட்டு கற்பிக்கப்படுகிறது. இந்த சுவர் சித்திரம் கல்வி மாணவர்களது மனதை வருடி வருகிறது.அர்ச்சுன சுப்ராய நாயக்கர் நடுநிலைப் பள்ளியில் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்த உடற் கல்வி ஆசிரியர் முரளிதரன் கூறும்போது, பள்ளிகளில் பொதுவாக சிறிய ஓவியங்கள் மாட்டப்பட்டு இருக்கும்.ஆனால் அவை மாணவர்களின் கவனத்தை கவராது. இது போன்ற மதில் சுவர் ஓவர்கள் அவர்களை ஈர்ப்பதோடு, சுலபமாக கருத்துகள் பதியும். அதனால் தான், ஓய்வு பெற இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் பணியாற்றும் பள்ளியில் மன நிறைவுக்காக ஓவியம் தீட்டி வருகிறேன் என்றார்.

இந்த ஓவிய கல்வி முறை தனியாருக்கு நிகராக இருப்பதுடன் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கல்வி கற்க துாண்டுகின்றன. இந்த முறைக்கு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முயற்சியை அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுப்படுத்த பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News