Monday, June 3, 2019

ஜூன் 3-17 வரை பள்ளிகளில் ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜூன் 3-ஆம் முதல் 17-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை செய்துள்ளன.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை, www.tnvelaivaaippu.gov.in எனும் தமிழக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தங்களது பள்ளிகள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.


தற்போது 2019-ஆம் ஆண்டில், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 3-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஜூன் 3 முதல் 17-ஆம் தேதி வரை, 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அந்தந்த பள்ளிகளில் இணையதளம் மூலமாக வேலைவாய்ப்புப் பதிவுப் பணியினை நடத்த பள்ளிக்கல்வி மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஏற்பாடு செய்துள்ளன.
இதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மாணவ, மாணவிகள் அணுகலாம். மேலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் (www.tnvelaivaaippu.gov.in) தாங்களே பதிவு செய்யலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News