பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து விடுவது வழக்கம். அதிகப்படியான வெப்பத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதனால் கடந்த சில வருடங்களாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வந்ததால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை முடித்து ஐம்பது நாட்களுக்கு மேல் விடுமுறையை தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டும், மாணவர்களின் உடல் நலத்தை பேணிகாப்பதில் கவனம் செலுத்தும் விதமாகவும் ஜூன் 3 -ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை தள்ளி வைக்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே, அறிவித்தபடி ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக தொலைபேசி கொண்டு வரக்கூடாது என்றும், இருசக்கர வாகனங்களை(மோட்டார் சைக்கிள்) எடுத்துவரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறும் மாணவர்களிடம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் திருப்பித்தரப்படமாட்டாது எனவும் பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் காலை 9:15 மணிக்குள் பள்ளியில் இருக்கவேண்டும் என்றும், பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டு சீருடையில் வரவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிறந்தநாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில்தான் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே உள்ளது என கூறுகின்றனர்.