ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் புதியனவற்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி ,அலுவலர் இரா.வனஜா பேசினார்.
12 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்ட மாநில கருத்தாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முன் ஆயத்தக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
பயிற்சியினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் புதியனவற்றை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.கற்றுக் கொண்டால் வளரும் விஞ்ஞான உலகத்திற்கேற்ப மாணவர்களை அறிவாற்றல் உள்ளவர்களாக திறமை உள்ளவர்களாக மாற்ற முடியும்.பிற மாநிலத்தவரும் பாராட்டும் வண்ணம் நமது மாநில பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.எனவே இங்கு கருத்தாளராக வந்துள்ள நீங்கள் பயிற்சிக்கு வரவிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய உத்திகளை பயன்படுத்தி பாடப் பொருள்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
கூட்டத்திற்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் என்.செல்லத்துரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு) இரா.சிவக்குமார்,அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ( பொறுப்பு) கு.திராவிடச் செல்வம்,மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பணியிடை பயிற்சி துறைத் தலைவர் பி.நடராஜன் மற்றும் மாநில கருத்தாளர்களாக வந்திருந்த முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பி.பழனிச்சாமி செய்திருந்தார்.