Thursday, July 4, 2019

"முதல்வர் எங்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?" - ஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்டம்

பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று வாபஸ்பெறப்பட்டது.

ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர். சாலைமறியல் உட்பட பல்வேறுகட்டப் போராட்டங்களை அவர்கள் நடத்தினர். ஆனால், அவர்களை அழைத்துப் பேச தமிழக அரசு தயாராக இல்லை. சில நாள்களுக்குப் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ வாபஸ் பெற்றது



அந்தப் போராட்டத்தின்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் மீது வழக்குகள் போடப்பட்டன.

அதனால், பதவி உயர்வு கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணி, கடந்த மே 31-ம் தேதி பணி ஓய்வுபெற்ற நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதைக் கண்டித்து அரசு ஊழியர்கள் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் மூன்று நாள்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.



இது குறித்து நம்மிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சிலர், "அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனாலும், சுப்பிரமணி மீதான பணி இடைநீக்கம் உத்தரவு வாபஸ் உட்பட எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. முதல்வரைச் சந்திப்பதற்குத் தொடர்ச்சியாக முயற்சிசெய்து வருகிறோம். ஆனால், எங்களுக்கு அவர் நேரம் கொடுக்கவில்லை. எங்களைச் சந்திக்க ஏன் அவர் மறுக்கிறார் என்று தெரியவில்லை. எனவே, எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7-ம் தேதி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்" என்றனர்.

Popular Feed

Recent Story

Featured News