Wednesday, July 31, 2019

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மேல்நிலை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதியுதவி பெறும்மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளை சார்ந்த மாணவ, மாணவியருக்கு பொருளாதார உச்ச வரம்பின்றி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு மொத்தம் 10,87,147 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.



இந்த திட்டத்திற்காக 2019-20ம் ஆண்டிற்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு ₹7,300 லட்சம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு ₹6,548.11 லட்சம் என மொத்தம் ₹13,848.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு பயிலும் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியருக்கும் தொடர்ந்து இலவச மிதிவண்டிகள் வழங்கப்படும். இந்த திட்டம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News