Wednesday, July 3, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: சான்றிதழ்களை அனுப்பத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களை இணைத்து அனுப்பாத மாணவர்களுக்கு, அவற்றை அனுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீட் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை mbbsbds2019@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை (ஜூலை 3) மாலை 7 மணிக்குள் அனுப்பலாம்.
அந்த மின்னஞ்சலில் மாணவர்கள், தங்களது விண்ணப்ப எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைந்தது.
அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது.


ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, தரவரிசைப் பட்டியலை வெளியிட இயலவில்லை என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News