Wednesday, July 3, 2019

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்க்க முடிவு: அமைச்சர் தகவல்


கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எழிலரசன் பேசியது: அனைவரும் கட்டாயக் கல்வி பெறும் வகையில், கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி மாணவர் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றுதான் உள்ளது.


இதை ஏன் தனியார் பள்ளிகளில் மட்டும் சேர்க்க வேண்டும் என்று இருக்க வேண்டும்? அரசுப் பள்ளிகளிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வித் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் கூறப்படுகிறது. அப்படியென்றால், அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் சரியில்லை என்பதுபோல ஆகிவிடுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தி மாணவர்களைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குறுக்கிட்டு கூறியது:


இது நல்ல யோசனைதான். ஏற்கெனவே கர்நாடகம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்களை அரசுப் பள்ளிகளிலேயே சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
அதன் பிறகு, மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் பேசும்போது, இதுகுறித்து சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Popular Feed

Recent Story

Featured News