Tuesday, July 2, 2019

பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட உள்ளது


தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

கலசபாக்கம் தொகுதி லாடவரம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா என உறுப்பினர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், உறுப்பினரின் பெயரில் பன்னீரோடு சேர்த்து செல்வமும் உள்ளதால், இந்த ஆண்டே புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



இதேபோல் பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் புதிய கட்டிடம் கட்டித்தரப்படாத நிலை உள்ளதாக திமுக உறுப்பினர் பிச்சாண்டி கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு வருவாய் துறை மூலம் தான் நிலம் ஒதுக்கப்பட வேண்டும், அவ்வாறு நிலம் ஒதுக்கீடு செய்தாலும், கட்டிடம் கட்டுவதற்கான நிதி கிடைக்காத நிலை உள்ளது என்றும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சரிடம் கலந்து பேசி, ஒதுக்கப்பட்ட நிலங்களில் பள்ளிக்கூட கட்டிடம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News