Thursday, August 8, 2019

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்: விரைவில் அமல்


தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் இனி ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகளவில் இளைஞர்களே இறக்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காரணத்தினால் இறக்கின்றனர்.


தலைக்கவசம் அணிந்து செல்கிறவர்கள், அதற்குரிய கழுத்து பட்டையை அணிவது கிடையாது. இதன் விளைவாக அவர்கள் தலைக்கவசம் அணிந்தும் பயன் இல்லாமல் போய்விடுகிறது. இரு சக்கர வாகனத்தை எங்கே ஓட்டிச் சென்றாலும், எவ்வளவு தூரம் ஓட்டிச் சென்றாலும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். குழந்தைகளும் தலைக்கவசம் அணிவது, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும். ஒரு விபத்து ஏற்பட குறைந்தபட்சம் 10 அடி தூரம் போதுமானது ஆகும்.
எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் தங்களது கடமையை உணர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பொறுப்புணர்வுடன் பின்பற்றினால் மட்டுமே விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும்.


அபராதம் உயர்வு: தற்போது நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டம் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதமாக வசூலிக்கப்பட்டது, இனி ரூ.1,000-மாக வசூலிக்கப்படும். இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம், தலைக்கவசம் அணிந்தே வாகனத்தை ஓட்டுவோம் என்ற உறுதியான மனமாற்றம் ஏற்பட வேண்டும்.
எங்கே சென்றாலும் செல்லிடப்பேசிகளை கையில் எடுத்துச் செல்வதைப் போல் இரு சக்கர வாகன ஓட்டிகள் எங்கே சென்றாலும் தலைக்கவசம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News