Thursday, August 29, 2019

பதவி உயர்வு வழங்க கோரி செப்.4ல் இடைநிலை ஆசிரியர் போராட்டம்

தமிழகம் முழுவதும் செப்.4ல் தமிர்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில்: அரசு, அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடன் நடத்த வேண்டும்.

அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019ல் ஆசிரியர்கள், மாணவர்கள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் ஏராளமான பாதிப்புகள் உள்ளன. சிக்கல் நிறைந்த இந்த தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மூடப்பட்ட 46ஆரம்பப் பள்ளிகளை நூலகமாக மாற்றியதை தமிழக அரசு உடனே திரும்பப் பெற்று மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும். அரசாணை 145ல் உள்ள பள்ளி இணைப்பு என்ற முறையை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதை வலியுறுத்தி செப்.1 முதல் செப்.9 வரை பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர், பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட உள்ளது. செப்.4ல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News