Thursday, August 22, 2019

9, பிளஸ்-1 வகுப்புகளுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். அதைவிட்டு வேறு பாடங்களை நடத்தினால் அந்த மாணவர்கள் அடுத்த தேர்வை எழுத அனுமதி கிடைக்காது என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அதற்குரிய பாடங்களை நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக 9-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு 10-ஆம் வகுப்பு பாடங்களும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிளஸ் 2 பாடங்களையும் நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது.


இதன் மூலம் அந்த மாணவர்கள் பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்று பள்ளி நிர்வாகங்கள் கருதுகின்றன.
பெற்றோர் தரப்பில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல புகார்கள் இதுபோன்று வருகின்றன. இந்தநிலையில் இது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் பள்ளிகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன் விவரம்:
சிபிஎஸ்இ அங்கீகாரம் அளித்துள்ள மற்றும் வரையறுத்துள்ள பாடங்களை மட்டுமே 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்.
அதை மீறி வேறு பாடங்களை நடத்தவோ, அல்லது அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்தினாலோ அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக 9-ஆம் வகுப்பு (Skill),, பிளஸ் 1 வகுப்பு(Academic and Skill) ஆகியவற்றில் சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இதை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்.
அவர்கள் அந்தத் தேர்வுகளை எழுத தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள்.


மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஎஸ்இ அங்கீகாரம் வழங்கியுள்ள பாடங்கள் தொடர்பான பட்டியல் cbseacademic.nic.in/curriculum.html என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்குவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் அந்தப் பாடங்களின் பட்டியலை மாணவர்களுக்குத் தெரிவித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகே பாடங்களை நடத்தத் தொடங்க வேண்டும். 9-ஆம் வகுப்பு (Skill), பிளஸ் 1 வகுப்பு(Academic and Skill) ஆகியவற்றில் சிபிஎஸ்இ அங்கீகரித்துள்ள பாடங்களை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News