Friday, August 2, 2019

சாதாரண மனிதனும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, "தகவல் அறியும் உரிமை சட்டம்".!


இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004,ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, மே 11, 2005, மக்களவையிலும், மே 12, 2005, ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.


ஜூன் 21, 2005, அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் / மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். நோக்கம்:
அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.


தகவல் கொடுக்கும் கடமை: அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தகவல்களைப் பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.
தகவல்: ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழும்மாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.


விண்ணப்பம்: தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது விண்ணப்பம் செய்யப்படும் நிலப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ(அதிகாரிக்கோ) அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அனுப்பலாம்.



குறிப்பு: தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை. காலக்கெடு: விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News