Thursday, August 22, 2019

பள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்க முயற்சி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்



முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
பள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான 3 நாள் மேலாண்மை நிர்வாகப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, முகாமைத் தொடங்கி வைத்தனர்.
மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் வரவேற்றார்.


அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் திட்ட கூடுதல் இயக்குநர் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பணி நடைமுறை, ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு விதிகள், மனிதவள மேம்பாடு , தகவல் பெறும் உரிமைச் சட்டம், நேர் மேலாண்மை , மனஅழுத்த மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக பள்ளி மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சர்வே ஒன்றின் அடிப்படையில் அவர்களுக்கு கணிதத்தைக் கற்பதிலும், கற்றதை வெளிப்படுத்துவதிலும் திறமை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட கணிதத்தில் தடுமாறுகின்றனர்.
இதற்காக பள்ளி அளவிலேயே மாணவர்களின் கணிதத் திறமையை வளர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக ஆஸ்திரேலியாவின் சிறப்பான எளிய கணிதம் போதிக்கும் முறை கற்பிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் போடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


விரைவில் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வி முறையில் கணிதப்பாடம் சொல்லித் தரப்படும். அண்மையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தபோது தமிழகத்தின் கல்வித்துறையை மேம்படுத்தத் தேவையான கூடுதல் நிதி ஆதாரங்களை கேட்டுள்ளோம்.
தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மாணவர்களை அதற்குத் தயார் படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம்.
எதிர்காலத்தில் நீட் போன்ற எந்த நுழைவுத்தேர்வு வந்தாலும் தமிழக மாணவர்கள் அதை எதிர்கொள்வார்கள் என்றார் அவர்.
இதையடுத்து செய்தியாளர்களது கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியது:
நளினியின் பரோல் நீட்டிப்பு என்பது அரசு முடிவெடுக்கவேண்டிய விஷயம். இதுகுறித்த அரசின் முடிவு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.
பால்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. நாம் இரு தரப்பு நலனையும் பார்க்கவேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் கேட்கும் கொள்முதல் தொகையைக் கொடுத்தால்தான் அவர்கள் அரசுக்கு பால் சப்ளை செய்வார்கள்.


இதுகுறித்து சட்டப்பேரவையில் உரிய விளக்கம் அளித்த பிறகே பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எல்லா ஆட்சிக் காலத்திலும் விலை உயர்வு நடந்துள்ளது. பிரிவினை வாதம் பேசும் திமுகவை தடை செய்ய வேண்டும். எங்களால் பிரிவினை வாதத்தை ஏற்க முடியாது.
இப்போதெல்லாம் சீமானும், கமல்ஹாசனும் அதிமுகவை அடிக்கடி விமர்சனம் செய்கின்றனர். ஏனெனில் அதிமுக காய்த்த மரம்; கல்லடி படத்தான் செய்யும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அண்ணா மேலாண்மை நிலைய மேலாளர் சுந்தரராஜன், லினிடாப் நெட்வொர்க் நிறுவன மேலாளர் ஹூவான் லூயிஸ், இயக்குநர் கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Popular Feed

Recent Story

Featured News