Saturday, August 24, 2019

தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.


திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் கே.எம். நிட்வேர் குழுமத் தலைவரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான கே.எம்.சுப்பிரமணியம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதிய கட்டடங்களை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் கல்வித் துறைக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. தனியார் பள்ளிக்கு நிகரான 4 வகை வண்ண சீருடைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.


அரசுப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும். ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. தமிழகத்தில் 45 லட்சத்து 75ஆயிரம் மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
மடிக்கணினி வழங்கப்படாத மாணவ, மாணவிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார்.


சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரைப்புதூர் ஏ.நடராஜன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், உ.தனியரசு, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News