பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 16 துணை மருத்துவப் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்பட 16 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. வரும் 19-ஆம் தேதி வரை அவற்றை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 21 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வே.ரா. பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.