Saturday, August 3, 2019

யுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்!


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் சிவில் சர்வீசஸ் குடிமைப்பணிகளுக்காக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும். இதில், முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.



யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு ஜூன் 2, 2019ல் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 12ஆம் தேதி https://upsc.gov.in என்ற யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டிற்கான மெயின் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த ஜூலை 16ஆம் தேதியன்று வெளியிட்டது.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுத Detailed Application Form - I என்ற விரிவான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை யுபிஎஸ்சி இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதில் பங்குபெற விரும்புவோர் 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.



நடப்பு ஆண்டில் மொத்தம் 896 காலிப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைப் போல 12 முதல் 13 மடங்கு எண்ணிக்கையில் அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு (மெயின் தேர்வு) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News