Wednesday, August 7, 2019

சூரிய ஒளி உடலில் படுவதால் எலும்பின் வலிமை அதிகரிக்கும்: மருத்துவக் கல்வி இயக்குநர்

சூரிய ஒளி உடலில் படுவதால், எலும்பின் வலிமை அதிகரிக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.
இந்திய எலும்பியல் சங்கம் மற்றும் தமிழக எலும்பியல் சங்கம் இணைந்து, எலும்பு மற்றும் மூட்டு தினத்தை, சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடின. இதில், வலுவான எலும்பு வளமான முதுமை என்ற வாசகத்துடன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து, கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை வரை, மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடந்தது.


இந்தப் பேரணியை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் சுதாகர், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது:
இந்தத் தலைமுறையில், இளம் வயதிலேயே, மூட்டு வலி ஏற்படுவதைக் காண முடிக்கிறது. இதற்கு, சூரிய ஒளி உடலில் படாதது, பழங்கள் சாப்பிடாதது என பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும், வயது முதிர்வின் காரணமாக, எலும்புத் தேய்மானம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தவிர்க்க, சூரிய ஒளி, பால், பழங்கள், உடற்பயிற்சி செய்வதன் வாயிலாக, எலும்பு மற்றும் மூட்டின் வலிமையை அதிகரிக்க முடியும். மேலும், விட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்த பொருள்களை அதிகளவில் எடுத்து கொள்ள வேண்டும்.


முன்பெல்லாம், எலும்பு தொடர்பான பிரச்னைக்கு, பல மாதங்கள் கட்டுபோடும் பழக்கம் இருந்தது. தற்போது, அரசு மருத்துவமனைகளில், அதற்கான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதனால், விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பலாம் என்றார் அவர். இந்தநிகழ்ச்சியில் மருத்துவர்கள் திருநாராயணன், ரமேஷ்பாபு, ரவிபாபு செல்வராஜ், ராஜஸ்ரீ, கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular Feed

Recent Story

Featured News