Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 10, 2020

25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுக்கும் கல்வித்துறை!


கொரோனா கொடுமைக்கு மத்தியிலும் - 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சந்தேகம்!
மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 04/2020 நாள்: 09.04.2020
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_
கொரோனா என்னும் கொடிய நோய்த் தொற்றின் காரணமாக உலகமே செயலிழந்து நிற்கிறது. உலக வல்லரசுகளெல்லாம் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. நம் இந்திய நாட்டிலும் கொரோனாவின் கோரக்கரங்கள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது.
கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் சமூகத் தொற்றாக மாறி விடாமல் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 25 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளைக் கண்டறிந்து அதன் பெயர்ப் பட்டியலை குறிப்பிட்ட படிவத்தில் உடனடியாக அனுப்புமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அருகில் உள்ள பள்ளிகளின் விவரம், அப்பள்ளிகள் அமைந்துள்ள தூரம் போன்ற விவரங்களும் அப்படிவத்தில் கோரப்பட்டுள்ளன. இப்புள்ளி விவரங்களை உடனடியாகக் கேட்டுப் பெறுவதில் அந்தந்த மாவட்டக் காவல்துறையும் மிகுந்த அவசரம் காட்டி வருகிறது.
இதனால் 25 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகள் மூடப்படுமா? அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்களா? என்ற சந்தேகங்கள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 15.03.2020 முதல் தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறை கேட்கும் இப்புள்ளி விவரமானது ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ள இக்கட்டான சூழலில் திடீரென இதுபோன்ற புள்ளிவிவரங்கள் எடுக்கும்போது கல்வித்துறை அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
ஏற்கனவே தொடக்கக்கல்வித்துறையில் கடந்த சில மாதங்களாகவே பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதற்கு பல்வேறு ஆசிரியர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தற்போது 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளைக் கணக்கெடுப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே கல்வித்துறை இதுதொடர்பாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
ச.மயில்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

No comments:

Post a Comment