கரோனா கால ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாகும்.
தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன.
எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
இந்தத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது.
ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி தள்ளிவைக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மீண்டும் திருத்தும் பணி எப்போது தொடங்கும் என்பது பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஊரடங்கு முடிந்தவுடனே பணிகள் தொடங்கினாலும்கூட மே மாதத்தில்தான் முடிவுகளை அறிவிக்க முடியும்.
ஏப்ரல் 14 ஆம் தேதியே ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் உடனடியாகத் திருத்தும் பணியைத் தொடங்க முடியாது, பள்ளி வளாகங்கள் எல்லாம் தயார் செய்யப்பட வேண்டும் என்றும் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment