Sunday, May 10, 2020

சிபிஎஸ்இ நாடு முழுவதும் நடத்திய தேர்வுகளின் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்: 10 நாட்களில் முடிக்க திட்டம்


சென்னை: சிபிஎஸ்இ பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளன. இப்பணியில் 1 கோடியே 50லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை பொறுத்தவரையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் தொழில் கல்வி பாடங்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி மாதமே தொடங்கின. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கின. இதற்கிடயே கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதன்படி 29 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது அந்த தேர்வுகள் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கவும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் முறைப்படி தொடங்குகின்றன. குறைந்தபட்சம் 10 நாள் முதல் அதிக பட்சம் 50 நாட்களுக்குள் இந்த பணிகள் முடிந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரையில் 18 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பில் நாடு முழுவதும் 12 லட்சம் மாணவர்களும் தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் மொத்தம் 175 பாடங்களில் தேர்வு எழுதியதால் 1 கோடியே 50 லட்சம் விடைத்தாள்கள் திருத்த வேண்டி உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியை மேற்பார்வையிட 3000 பள்ளிகளில் இருந்தும் தலா ஒரு முதன்மை தேர்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மண்டல அலுவலர்கள் தங்கள் பொறுப்பில் 200 விடைத்தாள்கள் எடுத்துக் கொண்டு அதை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வீடுகளில் கொடுத்து திருத்தி வாங்கிக் கொள்ள வேண்டும். முன்னதாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் முகவரி, ஆதார் எண், பான் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை விடைத்தாள்களை கொடுக்கும் போது பெற்றுக் கெள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் 7 நாட்களில் அந்த விடைத்தாள்களை திருத்தி முடித்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News