Thursday, May 21, 2020

9ம் வகுப்பு வரை தேர்வு: பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை


சென்னை : 'அரசு உத்தரவை மீறி, மாணவர்களுக்கு தேர்வு நடத்தப் போவதாக கூறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.'ஊரடங்கு நடைமுறைகள் முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது, மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு படித்த பாடங்களில் தேர்வு நடத்தப்படும்; அந்த தேர்வின்படியே தேர்ச்சி வழங்கப்படும்' என, சில பள்ளிகள் தரப்பில், பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டது.அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, பள்ளிகளின் தேர்ச்சி பதிவேட்டில் பதிவு செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், 'பள்ளிகளை மீண்டும் திறந்ததும், ஏற்கனவே படித்த பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்; அந்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி தரப்படும்' என, சில தனியார் பள்ளிகள் தரப்பில், பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். தேர்வு இல்லாமல், அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு அரசு உத்தரவிட்ட நிலையில், அதை மீறி, மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் செயல்படக் கூடாது. தேர்வு வைத்து தேர்ச்சி வழங்குவது என்ற நடவடிக்கை, அரசின் உத்தரவை மீறும் செயலாகும்.இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை, அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கையாக, முதன்மை அலுவலர்கள் அனுப்பி, நிர்வாகத்தினரை எச்சரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News