Sunday, May 10, 2020

இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்


இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.
இதுதொடர்பாக திருச் செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
கரோனா ஊரடங்கால் திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல நேரிட்டால் விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக பரிசீலிக்கப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது.
ஆனால் இவ்வாறு ஆன்லைன் மூலமாக இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் அதை அதிகாரிகள் தாமதமாக பரிசீலித்து அனுமதி வழங்கு கின்றனர்.இதனால் அவசர மருத்துவ தேவைக்காக இ-பாஸ் கோருபவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். இதனால் அந்த பயணமே தேவையற்ற ஒன்றாகி விடுகிறது. அத்துடன் அவசர அவசியம் கருதி மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால் அதுதொடர்பாக ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக 24 மணி நேரமும் இ-பாஸ் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணாஆகியோர், ‘‘இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக அவசர அவசியம் கருதி விண்ணப்பித்தால் அவற்றை உடனடியாக பரிசீலித்து தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும்.இல்லையெனில் எமர்ஜென்சி என்பதற்கே அர்த்த மில்லாமல் போய் விடும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும்,இதுதொடர்பாக அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News