Friday, May 8, 2020

ஜூன், ஜூலை மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை அடையலாம் : எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை

டெல்லி : ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உச்சத்திற்கு அதிகரிக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 3வது முறையாக அமல்படுத்தப்பட்டு மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில்,1886 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜூன் ஜூலை மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சகட்டத்தை அடையலாம் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகள், புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உச்சமடைய வாய்ப்புள்ளது.

ஆனால் கொரோனாவின் தாக்கத்தில் மாற்றங்கள் உள்ளன. எனினும் அப்போது தான் கோவிட்-19 நோயின் தாக்கமும், ஊரடங்கு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பின் அவசியம் நமக்கு புரிய வரும்' என்றார்.

கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரிவடைந்து வரும் நிலையில், ரன்தீப் குலேரியா கூறிய தகவல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News