Sunday, May 10, 2020

நாளை முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளில் முக்கிய தளர்வுகள்.


சென்னை: நாளை முதல் தமிழகம் முழுவதும் லாக்டவுனில் முக்கிய தளர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இந்த தளர்வுகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனறும் அறிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்திய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஏற்கெனவே ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு:

சென்னை காவல் துறை
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24-3-2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2-5-2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

தனிக் கடைகள்
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11-5-2020 (நாளை) முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (அனைத்து தனி கடைகள்) காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

தமிழகத்தில்
அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (அனைத்து தனி கடைகள்) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

அனுமதி
சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேனீர் கடைகள் (டீ கடைகள்) பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

24 மணி நேரம்
பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி செயல்படும். பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.

தமிழகத்தில்
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

மாநகராட்சி ஆணையர்கள்
அரசால் அறிவுறுத்தப்பட்ட தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News