Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 4, 2020

ஓய்வு வயது உயர்வு சலுகை கோரி வழக்கு: மேலும் 48 ஆசிரியர்களை விடுவிக்க தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கக்கோரி சிவகங்கை அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம் உட்பட 5 ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, மனுதாரர்கள் 5 பேரையும் பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்தார். இந்நிலையில் இதே கோரிக்கைக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் இருந்து பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரலில் ஓய்வு பெற வேண்டிய நிலையில் பணி நீட்டிப்பு பெற்ற 48 ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிடுகையில், மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை விலக்கிக்கொள்ள வேண்டும். மனுதாரர்களுக்கு 3 மாதத்தில் ஓய்வூதியப்பலன்கள் வழங்கப்படும் என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதிடுகையில், ஓய்வு பெறும் வயது உயர்வு அரசாணை அமலுக்கு வரும் தேதி நிர்ணயம் செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளது. இது எந்த நோக்கத்திற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேறுவதாக இல்லை. புதிய மனுதாரர்கள் இன்னும் பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை. எனவே புதிய மனுதாரர்களையும் பணியிலிருந்து விடுவிக்க தடை விதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்கப்படவில்லை என்றால், தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஜூன் 12-க்கு ஒத்திவைத்து அன்று இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

No comments:

Post a Comment