Sunday, March 26, 2023

டான்செட் தேர்வு முடிவுகள் ஏப்.15-க்குள் வெளியிடப்படும் - அண்ணா பல்கலை. தகவல்

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல, எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க்ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடப்பாண்டு முதல் புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்வு. மாணவர் சேர்க்கை (சீட்டா) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2023-ம் ஆண்டு டான்செட், சீட்டா தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த பிப்ரவரியில் வெளியானது. இதையடுத்து டான்செட் தேர்வு தமிழகம் முழுவதும் 40 தேர்வு மையங்களில் நேற்று நடத்தப்பட்டது. தொடர்ந்து சீட்டா தேர்வு இன்று (மார்ச் 26) நடைபெறுகிறது.

இதனிடையே, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை பல்கலை.யின் டான்செட் பிரிவு செயலர் டி.ஸ்ரீதரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டான்செட் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் வெளியாகும். எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வு வழக்கம்போல் கோயம்புத்தூரில் நடைபெறும்.

அதற்கு டான்செட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். எம்இ, எம்.டெக் உட்பட முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

சீட்டா தேர்வு அடிப்படையில் பட்டதாரிகள் ஒரே விண்ணப்பத்தின்கீழ் தேர்வு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களை www.tancet.annauniv.edu வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News