Tuesday, March 21, 2023

8வது வகுப்பை இந்திய இராணுவக் கல்லூரியில் படிக்கலாம்... பெற்றோர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் 2023 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எதிர்வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.

சென்னை நகரிலும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை "கமாண்டன்ட், இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 " என்ற முகவரிக்கு காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, இணையவழியான www.rimc.gov.in மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

காசோலை மூலமாக (By sending Demand Draft):- கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட், அஞ்சல் குறியீட்டு எண் - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடுன் அவர்களுக்கு கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல் பவன், டேராடுன் (வங்கி குறியீடு 01576) உத்தரகாண்ட் செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூபாய் 555/-க்கான கேட்பு காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

இணையவழி மூலமாக (online payment) : இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in மூலமாக பொதுப் பிரிவினர் ரூபாய் 600/- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூபாய் 555/- யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது, இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, ஒளிநகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமிகளின் ) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2024 அன்று 11/2 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-01-2011 க்கு முன்னதாகவும் 01-07-2012 - க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்த்தலும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக்கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது, அதாவது 01-01-2024- ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில்(Recognised School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதளத்தை www.rimc.gov.in பார்க்கவும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News