Monday, March 20, 2023

நரை முடி பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்ல உதவும் ஆயுர்வேத வைத்தியங்கள்...!

அழகான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும். ஆனால், மாறுபட்ட சுற்றுச்சூழல் காரணமாக அனைவரும் ஏதோ ஒருவித கூந்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

கூந்தல் பிரச்சனையை சந்திப்பவர்கள் மட்டுமே அதை உணர முடியும்.

ஆனால், ஒரு கூந்தல் பிரச்சனை ஏற்பட்டால் மட்டும் அதை அனைவராலும் பார்த்திட முடியும். அது தான் நரைமுடி பிரச்சனை. நரைமுடி என்பது ஒருவருக்கு வயதான தோற்றத்தை அளிக்கக்கூடிய ஒன்று என்பதால் அந்த பிரச்சனையைச் சந்திக்கும் ஒருவர் சங்கடமாக உணரக்கூடும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, சிறு வயதினரும் நரைமுடி பிரச்சனைக்கு ஆளாக நேரிடும்.

இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்கங்கள் காரணமாக கூந்தல் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. இன்று பெரியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் நரை முடியால் பாதிக்கப்படுகின்றனர். நரை முடி ஒருவருக்கு கவலையை அளிக்கக்கூடியது. அந்த பிரச்சனையை சரிசெய்ய ஏராளமான கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்த பொருட்கள் எந்த வகையிலும் நிரந்தர தீர்வை அளித்திடாது. மாறாக, பக்கவிளைவுகளையே ஏற்படுத்தக்கூடும்.
நரைமுடிக்கான சிறந்த தீர்வு

நீங்களும் நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல் அதிலிருந்து விடுபட உதவும் இயற்கையான வழிகளில் ஒன்று தான் ஆயுர்வேதம். நரை முடியை எதிர்த்துப் போராட இரசாயனங்கள் இல்லாத எளிய வீட்டு வைத்தியங்களே சிறந்தது.

இளம் வயதில் முடி நரைப்பது சங்கடத்திற்கும், தன்னம்பிக்கை குறைவதற்கும் வழிவகுக்கும். ரசாயனம் நிறைந்த முடி சாயங்களைப் பயன்படுத்தினால் அது உங்கள் முடியின் தரத்தை பாதிக்கும். நரை முடியைப் போக்கவும், இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக்கவும் சில சிறந்த ஆயுர்வேத வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயமும் வெல்லமும்

நரை முடி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும், ஆனால், கூந்தலுக்கு எதையும் தடவுவதில் விரும்பவில்லை என்றால், வெந்தயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள். ஏனெனில், ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்வதன் மூலமும் நரை முடி பிரச்சனையைப் போக்கலாம்.

நரை முடி இயற்கையாகவே கருப்பாக மாற வேண்டுமெனில், வெந்தயத்துடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுங்கள். ஆயுர்வேதத்திலும் இந்த இரண்டையும் சேர்த்து சேர்த்து சாப்பிடுவது பல்வேறு பலன்களை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெந்தயமும் வெல்லமும் கூந்தலின் கருமையை திரும்பப் பெறுவது மட்டுமின்றி, முடி உதிர்வு, வழுக்கை விழுவது போன்ற பிரச்சனைகளை சரி செய்வதோடு, கூந்தலும் பளபளப்பாக மாறிடும்.

வெந்தய நீரில் கூந்தலை அலசவும்

நரை முடி பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவும் சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் வெந்தய ஹேர் வாஷ். வெந்தய தண்ணீரைப் பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்வது நரை முடி பிரச்சனையைப் போக்கிடும்.

அதற்கு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் ஒரு கையளவு வெந்தயத்தை போட்டு நன்கு கலக்கவும். பிறகு, அந்த நீரை கொதிக்க வைத்து ஆற விடவும். வெந்தய நீர் நன்கு ஆறியதும், அந்த நீரைப் பயன்படுத்தி தலையை அலசவும். பின்னர் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். 15 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை வெறும் தண்ணீரில் அலசிடவும்.

வெங்காயச்சாறு

நரை முடியைப் போக்க மிகவும் பொதுவான வழிகளில் ஒன்று வெங்காய சாறு. வாரத்திற்கு ஒரு முறை உங்கள் கூந்தலுக்கு, சரியான பராமரிப்பு தேவை. அப்படி செய்யும் போது, அதன் ஒரு பகுதியாக கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று தான் வெங்காயச்சாறு.

அதற்கு முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். தயார் செய்த சாற்றை கூந்தலில் தடவி, 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து அலசிடவும். ப்ரெஷாக தயாரித்த வெங்காயச் சாற்றை பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மேலும், காயங்கள் இருக்கும் இடத்தில் இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

நெல்லி விதை மற்றும் வெந்தய பொடி

நெல்லிக்காய் விதைகள், வெந்தயப் பொடி கலவையானது அனைத்து வித கூந்தல் பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும். இதற்கு பதிலாக நீங்கள், அதன் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

அதற்கு பாதாம், தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து, நெல்லிக்காய் மற்றும் வெந்தய பொடியுடன் சேர்த்து கலந்து, உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, ஓர் நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். முதல் நாள் இரவில் தடவி மறுநாள் காலையில் கூந்தலை அலசிடவும்.

கறிவேப்பிலை

கூந்தலின் சிறப்பான ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை எப்போதுமே சிறந்தது. நரை முடி பிரச்சனையைப் போக்க கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, நன்கு ஆறியதும் வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இந்த எண்ணெயை கூந்தலுக்கு தடவினால், உங்கள் முடியின் வளர்ச்சியைத் தூண்டுவது மட்டுமின்றி, இளநரை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News