Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 16, 2023

7.5 ஒதுக்கீட்டில் 606 அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்ஸ்! முதல் 10 இடம் பிடித்த மாணவர்கள் விவரம்:

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர 40,193 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் சீட் பெற உள்ளனர்.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


ரேங்க் லிஸ்ட்: தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்களும், 2 பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்களும், 150 இஎஸ்ஐ இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள இடங்களில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு 36,206 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியல் டாப்: பொது கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். பிரபஞ்சன் நீட் தேர்வில் 720 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சூர்ய சித்தார்த், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் ஆகியோர் தரவரிசை பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 565 மதிப்பெண்களுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

7.5 இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் டாப் 10 இடம் பிடித்த மாணவர்கள்:

1] சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்கள் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேலம்)

2] தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி மங்கரை, தருமபுரி)

3] காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் முருகன் 560 மதிப்பெண்கள் (அரசு ஆதி திராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி மௌலிவாக்கம்)

4 ]திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரோஜ 544 மதிப்பெண்கள் (சண்முகா இன்டஸ்ரிஸ் அரசு மேல்நிலைப்பள்ளி திருவண்ணாமலை)

5]சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவி அன்னபூரணி 538 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி உலகம்பட்டி)

6] சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அர்ச்சனா 537 மதிப்பெண்கள் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேலம்)

7]அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த | மாணவி அன்னபூரணி 533 மதிப்பெண்கள் (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடையார்பாளையம்)

8]பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த | மாணவன் புகழேந்தி 531 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்)

9]தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் கணேஷ் 530 மதிப்பெண்கள் (வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்)

10] திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் சாம் 523 மதிப்பெண்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி காசிநாயக்கன்பட்டி திருப்பத்தூர்)

மா.சுப்பிரமணியன் பேட்டி: அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 20ல் தொடங்கினால், தமிழ்நாட்டில் வரும் ஜூலை 25 முதல் கலந்தாய்வு நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மொத்த சீட்கள்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 6,326. அரசு ஒதுக்கீட்டில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி பிடிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 1268. மொத்தமாக, 7,594.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான மொத்த எம்.பி.பி.எஸ் இடங்கள்: 473. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான மொத்த பி.டி.எஸ் இடங்கள்: 133. ஆக, இந்த ஆண்டு 7.5 உள் ஒதுக்கீடு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள் 606. கடந்த ஆண்டுகளை விட 7.5 உள் ஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment