Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 29, 2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடங்களை தேர்வு செய்ய கால நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருக்கும் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களை தேர்வு செய்வதற்கு ஜூலை25 முதல் ஆகஸ்ட் 3 வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 - 2024ஆம் ஆண்டின் இளநிலை மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் 63,26 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 1,768 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்கு 25,856 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டிற்கு 3,042 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவிற்கு 179 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.

மேலும், அரசு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இருக்கும் இடங்களை தேர்வு செய்வதற்கு தங்களின் விருப்பப் பதிவு ஜூலை 25 முதல் 31 வரை நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,179 வரையிலும், நீட் தேர்வு மதிப்பெண் 720 முதல் 107 மதிப்பெண் வரை பெற்றவர்கள் பங்கேற்றலாம்.

இவர்களுக்கான இடங்கள் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3ஆம் தேதி கல்லூரியின் இடங்கள் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4 முதல் 8 வரை மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்கள்: அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்வதற்கு விருப்ப பதிவுகளை செய்வதற்கான காலத்தை நீட்டித்துள்ளது.

மேலும், மாணவர்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம். அவர்களுக்கான ஒதுக்கீடு ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் செய்யப்பட்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒதுக்கீட்டாணை இணைய தளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் ஆகஸ்ட் 7 முதல் 11 வரை தாங்கள் தேர்வு செய்து ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் விண்ணப்பப்பதிவு கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 500 ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

மேலும், வைப்புத்தொகையாக மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரி, மாநில தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக ரூ.30,000 செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் 1 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

கலந்தாய்வு, கல்லூரிகளின் விபரங்கள் மற்றும் கட்டண விபரம் ஆகியவை www.tnhealth, tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment