Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 29, 2023

பள்ளிக் கல்வி துறையின் நிர்வாக முடிவுகளில் தலையிடும் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கு கட்டுப்பாடுகள்

பள்ளிக் கல்வி துறையின் நிர்வாக முடிவுகளில் தலையிடும் விவகாரத்தில், மாவட்ட கலெக்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

பள்ளிக் கல்வி துறையில் முதன்மை கல்வி அதிகாரிகளும், அவர்களுக்கு கீழே, கல்வி மாவட்டம், வட்டாரம் வாரியாக, டி.இ.ஓ., - பி.இ.ஓ.,க்களும் செயல்படுகின்றனர். இந்த அதிகாரிகளுக்கான பணிகள், இடமாறுதல் போன்றவற்றை, அமைச்சர் மற்றும் துறை செயலர் முடிவு செய்கின்றனர்.

இந்த நிர்வாக முடிவுகளை செயல்படுத்துவதில், சில மாவட்டங்களில் கலெக்டர்கள் தரப்பில் இடையூறு ஏற்படுகிறது. இரு வாரங்களுக்கு முன், சி.இ.ஓ.,க்கள் இடமாறுதலில், கோவை, திருப்பூர், கரூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், கலெக்டர் அலுவலக தலையீட்டால் குழப்பங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, முதல்வர் அலுவலக அதிகாரிகள் வழியாக, கலெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, பிரச்னை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், நிர்வாக முடிவுகளில், கலெக்டர் அலுவலக தலையீடுகள் அதிகரித்தால், பள்ளிக் கல்வித் துறை பணிகளில் பாதிப்பு ஏற்படும் என, அதன் அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: முதல்வரின் பல்வேறு நலத் திட்டங்கள், முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தும் பணிகளில், பள்ளிக் கல்வி துறைக்கு பெரிய பங்கு உண்டு. 'நான் முதல்வன், நம்ம ஸ்கூல், பெண் கல்வி ஊக்கத்தொகை, காலை சிற்றுண்டி' என, எண்ணற்ற திட்டங்கள் உள்ளன.

இவற்றை முறையாக அமல்படுத்தும் வகையில், உரிய நிர்வாக முடிவுகளை துறைகள் மேற்கொள்கின்றன. அவற்றை மாவட்டங்களில் சரியாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாமல், கலெக்டர்கள் முட்டுக்கட்டை போட்டால், முதல்வரின் திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்களின் தலையீடுகள் தடுக்கப்ப-ட வேண்டும் என, மேல் மட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம். அதையடுத்து, விரைவில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும் விதமாக, சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்த, அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment