Monday, August 7, 2023

புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு: தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியீடு..!!

புதிய மாதிரி பாடத்திட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதே ஆகும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பாடப் பிரிவுகளுக்கு இடையே இணைத்தன்மை இல்லாததால் மாணவர்கள் பணியில் சேர சிரமப்படுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலேயே மாதிரி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-19-க்குப் பின் சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டம் மறுசீரமைக்கப்படாததை ஈடுசெய்யவே மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாதிரி பாடத்திட்டத்தின் உயரிய நோக்கம் கல்வியாளரிடையே சரியாகச் சென்றடையும் பொருட்டே விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

301 மாதிரி பாடங்கள் சீரமைப்பு: உயர்கல்வித்துறை

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடி, அண்ணா பல்கலைகழகம் , 10 கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகளின் பேராசிரியர்கள் பாடத்திட்ட சீரமைப்பில் 922 பேராசிரியர்களை கொண்டு 870 கூட்டங்கள் நடத்தப்பட்டு 301 மாதிரி பாடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மாதிரி பாடத்திட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பாக தொழில்துறையினரின் ஆலோசனையும் பெறப்பட்டது. நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்ட நோக்கங்களுக்கு ஏற்ப புதிய மாதிரி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News