Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 6, 2023

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள் : செப்டம்பரில் கலந்தாய்வு

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான (பிஎன்ஒய்எஸ்) கலந்தாய்வு செப்டம்பா் மாதத்தில் தொடங்கும் என இந்திய மருத்துவ தோ்வுக் குழு அறிவித்துள்ளது.

அதேபோன்று சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது தொடா்பான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன.

இதைத் தவிர, 17 தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 993 இளநிலை இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்களும் உள்ளன. மொத்தம் உள்ள 1,710 இளநிலை யோகா-இயற்கை மருத்துவ இடங்களும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பிளஸ்-2 தோ்வு அடிப்படையில் இந்த மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்த படிப்புக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் கடந்த வாரம் தொடங்கியது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளத்தில் ஆக.14-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. மாணவா்கள் தற்போது அப்படிப்புக்கு ஆா்வமாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்திய மருத்துவக் கல்வி தோ்வுக் குழுச் செயலா் மலா்விழி கூறியதாவது: யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு உள்ளது. நிகழாண்டிலும் அந்தப்படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலானோா் விண்ணப்பிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் 14-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பரில் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கும். நீட் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் சித்தா, யுனானி, ஆயுா்வதேம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அதற்கான அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment