Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 25, 2023

40 வயதானாலும் இளமையாக இருப்பது எப்படி..? 'இந்த' 5 விஷயங்களை செய்யுங்கள் போதும்..!

40களை புதிய 20 (40 is the New 20) என்று கூறுவதுண்டு. இதற்கு காரணம், காலங்கள் மாற மாற 'இளம் வயது' என்பதற்கான வயதும் மாறிக்கொண்டே வருகிறது.

40 வயதில் இருப்பவர்களால் 20 வயதில் இருக்கும் இளைஞர்கள் செய்ய முடியாத விஷயங்களை செய்ய முடிகிறது. ஆனாலும் பலர் 40 வயதாகிவிட்டால் தனக்கு மிகவும் வயதானது போல உணருகின்றனர். இந்த வயதில்தான் நாம் வாழ்வில் பல வகையான ஏற்றத்தாழ்வுகளை கண்டு நிறைய அனுபவமிக்க மனிதராக உயர்ந்திருப்போம். எந்த வயதானாலும் இந்த 5 விஷயங்களை செய்தால் உடலையும் மனதையும் இளமையாக வைத்து கொள்ளலாம். அவை என்னென்ன?

1.உடற்பயிற்சி செய்வது:

30-40களில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது இதற்கு கண்டிப்பாக உதவும். 35 வயதை கடந்தாலே சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வந்து சேரும். இது போன்ற நோய் பாதிப்புகளை தடுக்கவும் உடலை திடகாத்திரமாக வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவும். ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, டான்ஸ் ஆடுவது, ஜூம்பா பயிற்சி போன்றவை உடலில் நல்ல தசைகள் வளர உதவும். இவை மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். ஆதலால், உடலை என்றும் இளமையாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது சிறந்ததாகவும்.

2.சரும பரமாமரிப்பு:

இளமையாக இருக்கும் போது நம் சருமத்தை பாதுகாக்க என்னென்ன செய்வோமோ, அதையே வயதான பின்பும் செய்ய வேண்டும். 40களில் இருக்கும் பலர் திருமணம் ஆகி வாழ்வில் ஒரு இடத்தை பிடித்தவர்களாக இருப்பர். அவர்களில் பலர், "இதற்கு பிறகு எனக்கு என்ன இருக்கிறது.." என்ற எண்ணத்தில் அவர்களை அவர்களே பராமரிக்க தவறி விடுவர். ஆனால், என்றும் இளமையுடன் இருக்க கண்டிப்பாக கண்டிப்பாக நம் உடலையும் மனதையும் நாம் பராமரித்து கொள்ள வேண்டும். அதை, சரும பராமரிப்பில் இருந்து ஆரம்பிக்கலாம். வெயிலில் செல்வதற்கு முன்னர் சன் ஸ்க்ரீன் தடவுவது, வீட்டில் இருக்கும் சமயங்களில் ஃபேஸ் பேக் போடுவது என பல விஷயங்களை நாம் பின்பற்றலாம். அவ்வப்போது மசாஜ் அல்லது ஃபேஷியல் செய்து கொண்டால் முகம் பொலிவு பெரும். வயதான தோற்றத்தையும் இதனால் தவிர்க்கலாம்.

3 ஓய்வு:

ஓய்வு என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானது. ஓய்வு எடுக்கும் நேரம் வேண்டுமானால் வயதிற்கு ஏற்ப மாறலாம். அனைவருக்கும் கண்டிப்பாக 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. அதுவும் 40களில் இருப்பவர்கள் கண்டிப்பாக தன் உடலுக்கு தேவையான நேரம் தூங்கியே ஆக வேண்டும். நல்ல தூக்கம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சி பெற செய்யும். ஹார்மோன்களை சுரக்க செய்து உடலில் உள்ள திசுக்களை புதுப்பிக்கிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல உடலை பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது. நல்ல உறக்கம், இளமையை தக்க வைத்துக்கொள்ள உதவும்.

4.நீர்சத்து:

நம் வாழ்வில் எளிதாக கிடைக்க கூடிய அமுதம், தண்ணீர். எந்த வயதினராக இருந்தாலும் கண்டிப்பாக உடலில் நீர்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக தண்ணீர் குடிப்பது உடலில் உள்ளிருக்கும் பாகங்களை சரியாக இயங்க செய்யும். மேலும், உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொண்டால் முகமும் பளபளப்பாக மாறும். கண்டிப்பாக தினசரி 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதனுடன் நீர்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

5.மூளைக்கான பயிற்சி:

உடலை ஃபிட்டாக வைத்திருத்தல் மட்டும் இளமையாக இருப்பது என்றாகி விடாது. உலகம் அப்டேட் ஆக ஆக நாமும் அப்டேட் ஆகி கொண்டே இருக்க வேண்டும். மூளையை கூர்மையாக வைத்திருக்க நமக்கு பிடித்த செயல்களை செய்ய வேண்டும். நமக்கு சவாலாக தோன்றும் புதிர்களை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும். நிறைய படித்து, நிறைய கற்றுக்கொண்டு அறிவால் வளர்ந்து கொண்டே இருந்தால் வயது முதிர்வு என்பதே கிடையாது.

No comments:

Post a Comment