ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வியின் சார்பில் நடத்தப்படும் காலாண்டு தேர்வில், இந்த ஆண்டு, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், மாநிலம் முழுவதற்கும் ஒரே வினாத்தாளில், தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியரின் மொபைல் போனில் செயலி வழியாக தேர்வு நடத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் தங்கள் மொபைல்போனில், ஒவ்வொரு மாணவரையும் அழைத்து, அதில் உள்ள செயலியில் இடம் பெற்று உள்ள, ஆன்லைன் வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு மாணவருக்கும் தேர்வை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறைக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆறு முதல் எட்டு வயதுடைய குழந்தைகளான மாணவர்களை, மொபைல் போனை பயன்படுத்தி தேர்வெழுத வைப்பது, அவர்களது எழுத்து திறனை பாதிக்கும்.
மேலும், இணையதள பிரச்னையால், மொபைல் போன் முடங்குதல், மாணவர்கள் அதிக நேரம் மொபைல்போனை பார்ப்பதால் கண் பார்வை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, இந்த ஆன்லைன் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment