Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 17, 2023

ரேசனில் வருகிறது மாற்றம்.. இனி ரேஷன் கடையில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள்.. ஆன்லைனில் ரேஷன் கார்டு?

ரேஷன்தாரர்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், தமிழக அரசு எண்ணற்ற அறிவிப்புகளை செய்து வருகிறது.

அந்தவகையில், இப்போதும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு திட்டத்தை கொண்டு வரப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை அமைச்சர் சக்கரபாணி பேட்டிகளை தந்திருக்கிறார்.

அரசாணை: பயோ மெட்ரிக்குடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டிருக்கிறது.. அதனால், இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதுமடடுமல்ல, கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

மீண்டும் டெண்டர்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை ஒயாசிஸ் என்ற தனியார் நிறுவனம்தான் இதுநாள் வரை மேற்கொண்டு வந்தது. ஆனால், இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், மறுபடியும் டெண்டர் விடப்பட்டதில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கே அனுமதி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படி டெண்டரும் முடிவாகியிருப்பதால், ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி இதுகுறித்து சேலத்தில் நேற்று பேட்டி தந்துள்ளார்.

புகார்கள்: அப்போது அவர் சொல்லும்போது, "பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயல் இழந்து விடுகிறது. அதனால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 2 மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து தமிழக மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக எல்லா ரேஷன் கடைகளிலும் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை நீக்கி தரமான அரிசி வழங்கப்படுகிறது.

ஆன்லைன் கார்டு: தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல, குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு 15 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை நகல் பெற தபால்துறை மூலம் விண்ணப்பித்தாலே போதும். அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

ஆக, கருவிழிப்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாவதுடன், ஆன்லைனில் ரேஷன் கார்டு நகலையும் விரைவில் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment