Monday, November 6, 2023

இடைநிலை ஆசிரியா்களின் ஊதியமுரண்பாடு: நவ. 8-இல் கருத்துக் கேட்பு

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் வரும் நவ. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியா் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியா் பணியில் நியமனம் பெற்றவா்கள் 1.6.2009-க்கு முன் அதே பணியில் நியமனம் பெற்ற ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் கோருவது (சம வேலைக்கு சம ஊதியம்) தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் நவ. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் சங்கம், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் ஆகிய ஐந்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்துக்கு இரு பிரதிநிதிகளுக்கு மிகாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இதில் அரசு நிதித் துறைச் செயலா் (செலவினம்) தலைமையில் பள்ளிக் கல்வித் துறைச் செயலா், இயக்குநா் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். மேற்குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் பிரதிநிதிகளைத் தவிர மற்ற சங்கங்களின் பிரதிநிதிகள் வேறொரு நாளில் நடைபெறும் கூட்டத்துக்கு அழைக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News