Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 7, 2023

TNPSC - குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் தாமதம் என செய்தி வெளியானது. இந்நிலையில், பத்திரிகைகளில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. தேர்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய அரசு பணியாளர் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 5 மாதம். ஒன்றிய அரசு தேர்வாணைய செயல்திறனைவிட மாநில தேர்வாணைய செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை.


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும். மதிப்பீட்டு பணிகள் செவ்வனே நடைபெற்று 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 8,000 பேருக்கு முதல்வர் பணி நியமன ஆணை வழங்குவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் முதலமைச்சரால் குரூப் 4 பணியில் தேர்வு பெற்ற 10,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-24ம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தேர்வு பிப்.25-ல் நடைபெற்றது. இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்ததால் சற்றே தாமதமானது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2-வது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது. எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment