Monday, May 20, 2024

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க: மாணவர், பெற்றோர் கோரிக்கை

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மே 20) நிறைவு பெறுகிறது. இந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை 2.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே அறிவித்தபடி, விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மே 20) நிறைவு பெறுகிறது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதள வசதியில்லாதவர்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.50-ம், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் ரூ.2-ம்செலுத்தினால் போதும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044–24343106/24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News