Monday, June 3, 2024

பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழகத்தில் 4 இடங்களில் இன்று ‘கோடை கொண்டாட்டம்’ தொடக்கம்


பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவர்களில், கலை, விளையாட்டுகளில் தனித்திறன் பெற்ற மாணவர்களுக்கு ‘கோடை கொண்டாட்டம்’ என்ற சிறப்பு முகாம் தமிழகத்தில் 4 இடங்களில் இன்று (ஜூன் 3) தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்று,பிளஸ் 2 செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ‘கோடை கொண்டாட்டம்’ என்ற 5 நாள் சிறப்பு முகாம் ஏற்காடு, கொல்லிமலை, கொடைரோடு- பழநி, குற்றாலம் என4 இடங்களில் இன்று தொடங்குகிறது. இதில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு, உறைவிடப் பள்ளியில் இன்று முதல் முகாம் தொடங்குகிறது.

900 மாணவ, மாணவிகள் தேர்வு: இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியது: பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் கோடை கொண்டாட்டம் சிறப்பு முகாமுக்கு, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளில், கலைத் திறன், தனித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் 900 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்காட்டில் நடைபெறும் முகாமில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 225 பேர் பங்கேற்கின்றனர்.

அவர்களுக்கு கலை, விளையாட்டுப் போட்டிகள், யோகா, உள்ளிட்டவை வரும் 7-ம் தேதி வரை நடத்தப்படும். ஏற்காடு தவிர,நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு-பழநி, தென்காசி மாவட்டம் குற்றாலம் ஆகிய இடங்களிலும் இன்று முகாம் தொடங்குகிறது.

பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், மன அழுத்தம் நீங்கி, உற்சாகத்துடன் கல்வி பயிலும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஏற்காட்டில் நடைபெறும் முகாம், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர்தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் இருந்து வரும் பொறுப்பாளர்களைக் கொண்டு, நடத்தப்படும். முகாம் ஏற்பாடுகள் அனைத்தும் எவ்வித கட்டணமுமின்றி, பள்ளிக் கல்வித்துறையால் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News