Saturday, June 15, 2024

கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து எனில் முழு கட்டணத்தை திருப்பி தர யுஜிசி உத்தரவு


கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தை திருப்பி தர வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்துவிட்ட மாணவர்களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பி தரவேண்டும். ஆனால், இதை சில கல்லூரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என புகார்கள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகளை கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

அதன்படி கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழு கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி தரவேண்டும். அதேபோல், அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்தால், சேர்க்கை பணிகளுக்காக அவர்களிடம் ரூ.1,000 மட்டும் வசூலிக்கலாம். அதற்கு பின்பு சேர்க்கையை ரத்து செய்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கான கட்டணத்தை பிடித்தம் செய்துக் கொள்ளலாம்.

இந்த கொள்கை யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கல்வி நிறுவனத்துக்கும் பொருந்தும். எக்காரணம் கொண்டும் முழு கல்வியாண்டு அல்லது நடப்பு பருவத்துக்கான கட்டணங்களை பிடித்தம் செய்யக்கூடாது. இல்லையெனில் விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News