Friday, October 4, 2024

தொழில் முனைவோர்களாக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) அகமதாபாத் இணைந்து ‘தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ என்ற ஒராண்டு சான்றிதழ் (One year Certificate Course on Entrepreneurship and Innovation) படிப்பைத் தொடங்கவுள்ளது.

இந்தியாவின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோரை உருவாக்குவதில் தனக்குள்ள நெடிய அனுபவத்தினை இப்படிப்பின் பாடத்திட்டத்தினை உருவாக்குதல் மற்றும் வல்லுநர்களின் மூலம் பயிற்றுவிப்பது வழியாக பகிர்ந்தளிக்கிறது. இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையவழியாக https://oneyearcourse.editn.in/management/form/admissions/ வரவேற்கப்படுகின்றன. இந்த பாடத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.

21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ பிரிவுகளில் தொழிற்பயிற்சி முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள். இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். எனவே, ஒவ்வொரு தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். சிறந்த பாடத்திட்டம், நவீன நூலகங்கள். அனுபவமிக்க பயிற்றுநர்கள், நவீன தொழில்நுட்பம் கொண்ட வகுப்பறைகள் (Smartclass) இப்பயிற்சியின் சிறப்பம்சங்கள் ஆகும்.மேலும், விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும் மற்றும் 8668101638 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News